
லங்காவி, மே-16 – 2025 லீமா கண்காட்சிக்காக லங்காவி தீவில் ஒத்திகையில் ஈடுபட்ட, TLDM எனப்படும் அரச மலேசியக் கடற்படைக்குச் சொந்தமான படகொன்று, கட்டுப்பாட்டை இழந்து பொது சுற்றுலா படகுடன் மோதியது.
அங்குள்ள கடற்கரையருகே நேற்று மாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மோசமான காயங்களும் இல்லை என, TLDM உறுதிப்படுத்தியது.
படகிலிருந்த 5 அதிகாரிகளும் பணியாளர்களும் மேல் பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
அச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய சிறப்புக் குழு அமைக்கப்படுமென, TLDM தனதறிக்கையில் கூறியது.
படகு மோதிய வீடியோக்களும் புகைப்படங்களும் முன்னதாக வைரலான நிலையில், 2 வீரர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, லங்காவி போலீஸ் கூறியிருந்தது.