Latestமலேசியா

இன அரசியலுக்கு ஒருபோதும் தலைவணங்காதீர்; PKR அனைத்து மலேசியர்களுக்குமானது – ரமணன்

கோலாலம்பூர், மே-14 – “இனவெறி அல்லது இன அரசியலுக்கு நான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்; பி.கே.ஆர் அனைத்து மலேசியர்களுக்குமான ஒரு கட்சி” கூறியுள்ளார் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்.

என்னதான், இந்திய சமூகத்தின் வளர்ச்சியைப் பேணும் பொறுப்பை தான் சுமந்தாலும், இன அரசியலின் செய்தித் தொடர்பாளராக மட்டுமே செயல்படுபவன் தான் அல்ல என அவர் தெளிவுப்படுத்தினார்.

கோஷ்டிவாதம் நமது ஒற்றுமையை உடைக்க அனுமதிக்கக்கூடாது என, அடுத்த வார கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான ரமணன் சொன்னார்.

வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த தலைவர்கள் இயல்பாகவே தங்கள் சொந்த சமூகங்களின் தேவைகளுக்கு அதிக கவனம் செலுத்தலாம்; ஆனால் அதை ஒருபோதும் கட்சிக்குள் பிளவு ஏற்பட ஒரு காரணமாகப் பயன்படுத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

“கட்சியின் உயர் மட்ட முடிவுகளில், அடிமட்ட தொண்டர்களின் குரல்களைக் கொண்டு வருவதே உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் எனது முக்கிய குறிக்கோள்”

தவிர, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தன்னிடம் ஒப்படைத்த தேசிய அளவிலான பொறுப்புகளை – குறிப்பாக இந்திய சமூகத்திற்கு பயனளிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதும் தொடர்ந்து நிறைவேற்றுவதும் தமது இலக்கு என, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்

அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடிமட்டக் கட்சி கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அதிக வளங்கள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளைப் பெறுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன்.

இதன் வழி, கட்சி உறுப்பினர்களை சமூக சேவை மற்றும் உதவித் திட்டங்களை மிகவும் திறம்பட வழங்குவதற்கு வாய்ப்பு வழங்குவேன் என்றார் அவர்.

உதவித் தலைவர் பதவிக்கு ரமணன் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!