
வூஹான், பிப்ரவரி-24 – மனிதர்கள் மூலமாக பரவக் கூடிய அபாயமுள்ள மற்றொரு கொரோனா வைரஸ் கிருமியை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதற்கு HKU5-CoV-2 என வூஹான் கிருமியியல் ஆய்வுக் கூடம் பெயரிட்டுள்ளது.
வௌவால்களின் உடலில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அப்புதியக் கிருமி, சில ஆண்டுகளுக்கு முன் உலகையே புரட்டிப் போட்ட கோவிட்-19 பெருந்தொற்றுக்குக் காரணமான கிருமியுடன் மிகவும் ஒத்திருக்கிறது.
SARS-CoV-2 டைப் போலவே இந்த HKU5-CoV-2 கிருமியும் மனித உயிரணுக்களில் பரவும் ஆபத்தைக் கொண்டுள்ளது; இது நேரடியாகவும் தொற்றும் அல்லது ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கும் தாவுமென, கிருமியியல் நிபுணர் Shi Zhengli கூறினார்.
இப்புதியக் கிருமியின் வருகை, பொது சுகாதாரத்திற்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்;
இதனால் உலகளவில் பெரும் பீதி உண்டாகலாம் என, ‘batwoman அல்லது ‘வௌவால் பெண்’ என்ற பட்டப் பெயரைக் கொண்டருவமான அவர் சொன்னார்.
MERS-Cov சுவாசத் தொற்று நோயைப் போலவே, இந்த HKU5-CoV-2 கிருமியும், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகளைக் கொண்டு வரும்.
கைமீறும் சம்பவங்களில் மரணங்களும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இதற்கு இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை; இந்நிலையில், வௌவால்கள் வாழும் இடங்கள், கிருமியைப் பரவச் செய்யும் விலங்குகள், அந்நோய் சம்பவங்கள் பதிவாகும் நாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் போன்ற அம்சங்களில், ஆராய்ச்சியாளர்கள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.
அக்கிருமி குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு விட்ட போதிலும், இன்னும் நிறைய விஷயங்கள், குறிப்பாக மனிதர்கள் மத்தியில் அது எப்படி பரவுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.