கோலாலம்பூர், நவம்பர் 28 – GST – பொருள் சேவை வரியை மீண்டும் இவ்வாண்டோ, அடுத்தாண்டோ அமல்படுத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை.
அதற்கு முன்னர், இலக்கிடப்பட்ட உதவித் தொகை திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக, நிதி துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.
2024 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வரிகளை அரசாங்கம் அமல்படுத்தும் எனவும் அஹ்மாட் மஸ்லான் சொன்னார்.
நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டே, SST – விற்பனை சேவை வரி ஆறு விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளதையும் துணையமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இலக்கிடப்பட்ட உதவித் தொகை திட்டத்திற்கு கீழ் முதலில் டீசல், RON 95 பெட்ரோல் ஆகியவை உட்படுத்தப்படும். அதனால், GST பொருள் சேவை வரியை அமல்படுத்தும் திட்டம் தற்சமயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெளிவுப்படுத்தினார்.
GST – பொருள் சேவை வரி அமலாக்கம் குறித்து, செனட்டர் டத்தோ சிவராஜ் எழுப்பிய கேள்விக்கு அஹ்மாட் மஸ்லான் இவ்வாறு பதிலளித்தார்.