கோலாலம்பூர், மார்ச் 17 – ரிங்கிட் நாணய மதிப்பு தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.98 -டாக பதிவானதாக கூகளில் தவறாக காட்டப்பட்ட தகவலைச் சுட்டிக் காட்டி, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
ஆகக் கடைசி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.70 தான் என தனது முகநூல் பக்கத்தில் அவர் சொன்னார்.
கூகளில் அத்தவறு நடப்பது இது முதன் முறையல்ல; எனவே, அது குறித்து அந்த இணையத் தேடல் நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும் என மலேசிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த மாதம் ரிங்கிட்டின் மதிப்பு சரிவு கண்ட நிலையில், இது போன்ற தவறான தகவல்கள் மலேசிய மக்கள் மத்தியில் குழப்பத்தையும் வீண் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடும் என்றார் அவர்.
கூகளில், முன்னதாக டாலருக்கு எதிராக ரிங்கிட் குறைவாக மதிப்பிடப்பட்டு, அது இணையத்தில் வைரலுமானது.
இதையடுத்து, அது சரியான தரவு அல்ல என சனிக்கிழமை மறுப்பு அறிக்கை வெளியிட்ட பேங் நெகாரா, கூகள், மலேசிய ரிங்கிட்டின் நாணயப் பரிவத்தனையை இரண்டாவது முறையாக தவறாகக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியது.
ரிங்கிட் பரிவர்த்தனை விகிதம் குறித்த சரியான துல்லியமான தகவல்களை பேங் நெகாரா அகப்பக்கத்தில் பொது மக்கள் பார்க்கலாம்.