கோலாலம்பூர், ஜன 8 – ஊழல் விவகாரத்தில் இணக்கம் போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். அரசாங்க ஆதரவாளர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியினராக இருந்தாலும் சரி , யார் லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டாலும் அரசாங்கம் விட்டுக் கொடுக்கும் போக்கை கொண்டிருக்காது என அன்வார் கூறினார். 2024ஆம் ஆண்டின் தேசிய சிறந்த நிர்வாக கருத்தரங்கில் உரையாற்றிய அன்வார், லஞ்ச ஊழலுக்கான போராட்டத்தில் தாம் முழுக் கடப்பாட்டை கொண்டிருப்பதாகவும் ஒற்றுமை அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இதுபோன்ற லஞ்ச ஊழல் நடைமுறை ஏற்படாமல் இருப்பது உறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். .
வலுவான தரவுகளும் ஆதாரங்களும் , காரணங்களும் இருந்தால் லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் முக்கிய பிரமுகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக அமலாக்க நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார். ஆதாரம் இருக்குமானால் அவர்களது பதவி அல்லது செல்வாக்கு குறித்து பொருட்படுத்தாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். இந்த விவகாரத்தில் துணிச்சலாக செயல்பட்டுவரும் MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் அன்வார் தமது பாராட்டை தெரிவித்துக கொண்டார். இதனிடையே தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பெரிக்காத்தான் நேசனலிடம் போதுமான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கெடா மந்திரிபெசார் Sanusi Noo கூறியிருப்பது குறித்து கருத்துரைக்க விரும்பவில்லையென அன்வார் கூறியுள்ளார்.