
கோலாலம்பூர்- ஏப் 3 – மலேசிய ஏர்லைன்ஸின் MH370 விமானத்தை தேடும் பணியை ஓசியன் இன்பினிட்டி ( Ocean Infinity ) நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் , இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தேடும் பணி தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய வானிலை நிலைமைகள் தேடும் நடவடிக்கைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
MH370 ஐ மீண்டும் தேடுவதற்கு அரசாங்கம் கடந்த வாரம் Ocean infinity யுடன் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டதாகவும், எனினும் அவர்கள் இப்போதைக்கு தேடும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டனர் என்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ) பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அந்தோனி லோக் கூறினார்.
மார்ச் 25ஆம்தேதி எம்.எச் 370 விமானத்தை தேடும் நடவடிக்கைக்கான உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின் அந்நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக முகநூலில் எம்.எச் 370 விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பதிவிட்டுள்ளனர். இந்த தாமதம் குறித்து ஒரு சிலர் தங்களது ஏமாற்றத்தை தெரிவித்தனர். இந்த விவகாரம் முடிவடைவதற்கு மேலும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருப்பதாக Patricia Matsura என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.