
கோலாலம்பூர், ஏப் 28 – நல்லாசிரியர் நாராயணசாமி மறைந்து ஒரு ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 140க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இடைநிலைப்பள்ளி ஆசிரியராக, ஆசிரியர் பயிற்சிக் கழக விரிவுரையாளராக, பல்கலைக்கழக பகுதி நேர விரிவுரையாளராக, பாட நூல் ஆசிரியராக, தமிழ்ப் பயிற்றியலின் ஆளுமையாக இப்படிப் பல்வேறு பரிமானங்களைக் கடந்து வந்த காலஞ்சென்ற நாராயணசாமியின் மறைவு தமிழ்க்கல்விக்கு ஏற்பட்ட ஒரு பெரும் இழப்பாகக் கருதப்படுறது.
மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று 2023 வரை சேவையாற்றி அவர் தமிழ்மொழிக் காப்பகத்தின் அமைப்புக்கும் அதன் தொடர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி தனது 77 ஆவது வயதில் அவர் காலமானார்.
இதனிடையே, கோலாலம்பூர் , பிரிக்பீல்ஸ்சிலுள்ள இந்திய தூதரகத்தின் சுபாஸ் சந்திரபோஸ் கலாசார மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம், மலேசியத் தமிழ் அறவாரியம், GOPIO, போர்ட் கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்சியில் நல்லாசிரியர் நாராயணசாமி” எனும் நூல் வெளியீடு கண்டது. இந்நூலை இந்தியத் தூதரக்கத்தின் முதன்மை செயலாளர் திரு. இராஜேஸ் மணியில் வெளியீடு செய்தார். இந்நூலை அன்னாரின் துணைவியார் லட்சுமி அம்மையார் பெற்றுக் கொண்டார்.
மேலும் அன்னாரின் மறைவை ஒட்டி ஆண்டுதோறும் பல்கலைக்கழக, ஆறாம் படிவ மாணவர்களுக்கான தேசிய நிலையிலான புதிர்ப்போட்டி ஒன்றை மலாயாப் பல்கலைக்கழக மொழியியல் புலத்தோடு இணைந்து ஏற்பாடு செய்யவிருப்பதாக இந்நிகழ்ச்சியின் இறுதி அங்கத்தில் ஏற்புரை வழங்கிய டத்தோ ஜே. பழநியப்பன் அறிவித்தார்.
அதோடு நாராயணசாமி எழுதி வைத்திருந்த கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடுவதும் அவர் நூல்களை மின்னூலாக வடிவம் மாற்றுவதும் தங்களது திட்டங்களில் சில என்றும் பழநியப்பன் அறிவித்தார்