
பேங்காக், மே 21 – தாய்லாந்தில் ராட்சடாவில் ( Ratchada ) உள்ள அடுக்கு மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் ஒருவர் , தனது அண்டை வீட்டார் நாய்கள் மற்றும் பூனைகளை வளர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடியிருப்பு லிப்ட் பகுதியில் இரண்டு பாம்புகளை விடுவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். Onginn என்று அடையாளம் கூறப்பட்ட அந்தப் பெண், கடந்த திங்கட்கிழமை, லிப்ட் பகுதிக்கு அருகில் பாம்புகளைக் காட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது முகநூலில் பதிவேற்றினார். நாய்கள் குரைப்பது, பூனை சிறுநீர், பூச்சிகள் போன்றவற்றால் ஏற்படும் தொந்தரவுகள் குறித்து அடுக்குமாடி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும், ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பெண் பதிவிட்டுள்ளார்.
நீங்க நாய்களையும் பூனைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள் , நான் பாம்புகளைப் பார்த்து கொள்கிறேன். இந்தக் காண்டோமினியத்தை ஒரு வனவிலங்கு பூங்காவா மாற்றுவோம்.
உங்கள் பூனைகளையும் நாய்களையும் விளையாட வெளியே அழைத்துச் செல்லுங்கள், என் செல்லப்பிராணிகள் கூட பாசத்தைக் காட்ட விரும்புகின்றன. அவை உங்கள் நாயை மிகவும் இறுக்கமாக அணைத்துக் கொள்ளும், அதனால் குரைக்க முடியாது என அப்பெண் பதிவிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கை வைரலாகி பல்வேறு எதிர்வினைகளைப் பெற்றதோடு , சமூக ஊடகங்களில் 17,000 க்கும் மேற்பட்ட பகிர்வுகள் மற்றும் ஆயிரக்கணக்கான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில பயனர்கள் அவரது செயல்களை ‘மிருகத்தனமான ஆனால் திருப்திகரமானது’ என்று விவரித்தனர், மேலும் அவரது அண்டை வீட்டார் விதிகளைப் பின்பற்ற மறுப்பதால் அவர் நீண்டகால இடையூறுகளைத் தாங்க வேண்டியதில்லை என்று வாதிட்டனர். சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் அடுக்குமாடி நிர்வாகம் சம்மன் அனுப்பி, ஒவ்வொருவருக்கும் 10,000 பாட் அபராதம் விதித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.