
நீலாய், ஜூன்-23 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 5 தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளார்.
பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் அதனை அறிவித்தார்.
பேராக், Chemor-ரில் உள்ள கிளேபாங் தமிழ்ப் பள்ளி, ஜோகூர் ஸ்கூடாயில் உள்ள ரினி தோட்டத் தமிழ்ப் பள்ளி, சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள நோர்த் ஹம்மோக் தமிழ்ப் பள்ளி, ஜோகூர் கூலாய் பெசார் தமிழ்ப் பள்ளி, பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி ஆகியவையே அந்த 5 பள்ளிகளாகும்.
நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதன் ஒரு பகுதியாகவே, இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக பிரதமருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாகவும் சண்முகம் குறிப்பிட்டார்.
நீலாய் ஸ்ப்ரிங் ரிசோர்ட்டில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரிய கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் அவ்வாறு கூறினார்.
13-ஆவது மலேசியத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு கூடுதல் மானியத்தை ஒதுக்கும்படியும் பிரதமரை தாம் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியங்களை முறையாக பயன்படுத்தினால் கூடுதல் மானியங்களை கேட்டு பெறமுடியும் என்றார் அவர்.
இவ்வேளையில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் சண்முகம் மூக்கன் வலியுறுத்தினார்.
அம்மாநாட்டில், பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார், கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ல்ல் சாந்தியாகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.