Latestமலேசியா

நாட்டைப் பிளவுப்படுத்த இன-மதத் துவேசங்களை எழுப்பாதீர் – பிரதமர்

லண்டன், ஜனவரி-21 – ஊழல், இன மற்றும் மத தீவிரவாதப் போக்கை விட்டொழிக்கும் தைரியம் மலேசிய இளையோருக்கு வர வேண்டுமென பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார்.

மலேசியா, பல்லின மக்களைக் கொண்ட அமைதியான சுபிட்சமான நாடு; ஆனால் அது சிலரின் கண்களுக்குப் பொறுக்கவில்லை; அதனால் தான் இன-மத வாதங்களை முன்னிறுத்தி நாட்டை அவர்கள் பிளவுப்படுத்துவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.

இந்நாட்டை சீனர்களுக்கு விற்று விட்டோம்; சீனர்களின் கைகளுக்கு அதிகாரம் சென்று விட்டது; பினாங்கு கிறிஸ்துவமயாக்கப்பட்டு விட்டது என ஏராளமான கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படுகின்றன.

ஜோகூர் பாருவில் சீன உணவகத்தில் தாம் உணவருந்தியதை கூட பெரிதாக்கி அத்தகையோர் குளிர்காய்ந்தனர்; அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இனங்கள் மோதிக்கொள்ள வேண்டுமென்பதே.

அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு அக்கூட்டம் தயாராக இருப்பதாக பிரதமர் சாடினார்.

அரசாங்கக் கொள்கைகளை விமர்சனம் செய்யுங்கள்; அதை நான் பொறுத்துக் கொள்வேன்; ஆனால் இன-மத விவகாரங்களை முன்னெடுத்தால், நான் அமைதிக் காக்க மாட்டேன், நிச்சயம் கடுமையாக நடந்துகொள்வேன் என டத்தோ ஸ்ரீ அன்வார் எச்சரித்தார்.

நான் மலேசியத் தலைவராக இருக்க விரும்புகிறேன்; மலாய்க்காரர், சீனர், இந்தியர், கடசான், இபான் என எந்த பாகுபாடுமின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதே எனது பாணி என்றார் அவர்.

பிரிட்டனுக்கான அண்மைய பயணத்தின் போது, லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவில்டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!