போலீஸ் விசாரணைக்கு வழி விட்டு SkyCity Tower கண்ணாடி நீர் சறுக்கு விளையாட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது i-City

ஷா ஆலாம், பிப்ரவரி-1 – ஷா ஆலாம் i-City கேளிக்கைப் பூங்காவில் SkyCity Tower கண்ணாடி நீர் சறுக்கு விளையாட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கண்ணாடி நீர் சறுக்கிலிருந்து மிதவை பலூன் ஒன்று பார்வையாளர் மீது விழுந்து அவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரித்து வருவதால், அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் i-City-யில் மற்ற பகுதிகளில் விளையாடவோ சுற்றிப் பார்க்கவோ டிக்கெட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்;
அல்லது 03-5521 8800 என்ற எண்களில் கேளிக்கைப் பூங்கா நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு முழுப் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
எது எப்படி இருப்பினும், ‘2025 சிலாங்கூருக்கு வருகைப் புரியும் ஆண்டு, ‘2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டு’ ஆகிய இரு சுற்றுலா ஊக்குவிப்பு இயக்கங்களிலும் சிலாங்கூரை முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னிறுத்தும் தங்களின் கடப்பாடு தொடருமென i-City அறிக்கையொன்றில் கூறியது.
புதன்கிழமை இரவு 11 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அந்த கண்ணாடி நீர் சறுக்கின் அடியில் நடந்து சென்ற குடும்பத்தின் மீது, மிதவை பலூன் விழுந்தது.
அதில் 20 வயது பெண் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளானார்.
தங்களின் எழுத்துப்பூர்வ அனுமதியில்லாமல் நீர் கேளிக்கைப் பூங்காவை கட்டியதற்காக, i-City நிர்வாகத்துக்கு கடந்தாண்டு நவம்பரில் ஷா ஆலாம் மாநகர மன்றம் அபராதம் விதித்திருப்பது முன்னதாக போலீஸ் விசாரணையில் கண்டறிப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.