இஸ்கண்டார் புத்ரி, டிச 4 – ஜோகூரில் உள்ள சுங்க, குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் தனிமைப்படுத்தலுக்கான வளாகத்திலும் கடப்பிதழுக்குப் பதிலாக QR குறியீட்டைப் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென, மாநில மந்திரி பெசார் Onn Hafiz Ghazi பரிந்துரைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் அத்தகைய முறையை அமல்படுத்தவிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஜோகூரிலும் அதேபோல் செயல்படுத்தலாம் என்றும், இதன்மூலம் ஜோகூர் – சிங்கப்பூர் இடையிலான சிறப்புப் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த அந்த நடைமுறை உதவும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளையில், சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே ஊழியர்களும் பொருட்களைக் கொண்டுச் செல்லும் வாகனங்களும் சுமுகமாகக் கடந்துசெல்வதை உறுதிப்படுத்தும் விதமாக, மலேசியாவின் மத்திய அரசாங்கத்திடமும் சிங்கப்பூர் அரசாங்கத்திடமும் மூன்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளது ஜோகூர் அரசாங்கம்.
முதலாவதாக, “ஒன்றுக்கு மேற்பட்ட முறை செல்வதற்கான விசா, சிறப்பு அனுமதி அட்டைகளை வழங்குதல், குடிநுழைவு, சுங்கத்துறைகளில் போதிய எண்ணிக்கையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுவதை உறுதிசெய்தல், சோதனைச் சாவடிகளில் QR குறியீட்டை அறிமுகம் செய்வது ஆகியவை குறித்து மலேசியாவின் மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலகு ரயில் போக்குவரத்து (lrt) அமைப்பு, அதிவேக ரயில் (HSR) சேவை, படகு சேவைகள் மற்றும் தண்ணீர் டாக்சிகள் தரையிறங்கும் இட வசதிகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.