
கோலாலம்பூர், ஏப் 30 – உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S. A விக்னேஸ்வரன் தொழிலாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நாட்டிலுள்ள தொழிலாளர் சமூகத்தின், குறிப்பாக இந்திய சமுதாயத் தொழிலாளர்களின் நலன்களை மஇகா, அரசாங்கத்தின் உதவியோடு தொடர்ந்து பாதுகாக்கும்.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும் ம.இ.கா தொடர்ந்து பாடுபடும் என நாளை கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நமது மூதாதையர்கள் சாதாரண தொழிலாளர்களாக, ரப்பர் தோட்டங்களிலும் இதர துறைகளிலும் வழங்கிய உழைப்புதான் அவர்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அடிப்படை காரணமாக இருந்துள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது என்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே நாம் செய்யும் தொழிலை மதித்து , முழு மனதோடு உழைக்க வேண்டும் என்ற சிந்தனையையும் தொழிலாளர் சமூகம் எப்போதும் உணர்ந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.