Latestமலேசியா

16-ஆவது பொதுத் தேர்தலில் பி.கே.ஆருக்கு நூருல் இசா தலைமையேற்க ரமணன் ஆதரவு

கோலாலம்பூர், மே-13 – 16-ஆவது பொதுத் தேர்தலில் பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் பரப்புரைகளுக்கு நூருல் இசாவே தலைமையேற்க வேண்டும்.

2018 பொதுத் தேர்தலில் கட்சியின் தேர்தல் இயக்குநராக அவர் சிறப்பாக செயல்பட்டிருப்பதால், அப்பொறுப்புக்கு அவரே தகுதியானவர் என, டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நூருல் இசாவின் தலைமையில் வரலாறு காணாத அளவுக்கு பி.கே.ஆர் 47 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியதை, அக்கட்சியின் துணைத் தகவல் பிரிவுத் தலைவரான அவர் சுட்டிக் காட்டினார்.

எதிர்கட்சியாக இருந்த போதே அச்சாதனையை எட்ட முடிந்தது என்றால், இப்போது அரசாங்கமாக இருக்கிறோம்.

எனவே, நூருல் இசாவை கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்தல் இயக்குநராகவும் கொண்டு தேர்தலைச் சந்தித்தால், 70-லிருந்து 80 நாடாளுமன்றத் தொகுதிகளை பி.கே.ஆர் எளிதில் கைப்பற்றுமென, ரமணன் கூறினார்.

2022-ல் நடைபெற்ற 15-ஆவது பொதுத் தேர்தலில் பி.கே.ஆர் 31 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றிருந்தது.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சருமான ரமணன், பேராக்கில் பி.கே.ஆர் தொகுதித் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அம்மாநிலத்தில் உள்ள 24 தொகுதித் தலைவர்களில் 22 பேர், துணைத் தலைவர் தேர்தலில் நூருல் இசாவுக்கு ஆதரவுத் தெரிவித்திருப்பதாகவும் ரமணன் கூறிக் கொண்டார்.

இம்மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுன் மூத்த புதல்வியான நூருல் இசா, நடப்புத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியை எதிர்த்து நேரடி போட்டியில் குதித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!