திருவனந்தபுரம், பிப்ரவரி-27, விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரம் படைக்கும் முயற்சியில் விண்வெளிக்கு பயணமாகும் 4 வீரர்களை இந்தியா அறிவித்திருக்கிறது.
140 கோடி இந்திய மக்களின் கனவுகளைத் தாங்கி அவர்கள் விண்வெளிக்குப் பயணமாவதாக, அந்நால்வரையும் இன்று அறிமுகம் செய்து வைத்து பேசுகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருணித்தார்.
கேரளா, திருவனந்தரபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடைபெற்ற அந்த அறிமுக நிகழ்வில், அவர்கள் தெரிவுச் செய்யப்பட்டதன் அடையாளமாக அந்நால்வருக்கும் மோடி விண்வெளி வீரர் இறக்கைகளை வழங்கினார்.
விண்வெளித் துறையில் தொடர்ந்து வியக்கத்தக்கச் சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்தியாவை, இந்த ககன்யான் விண்வெளித் திட்டம் அடுத்தக் கட்டத்துக் கொண்டுச் செல்லும் என மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.
ககன் என்றால், சமஸ்கிருத மொழியில் வானம் என்று அர்த்தம். வானை நோக்கிச் செல்லக் கூடிய பொருள் என்பதால் அதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப, 2006-ஆம் ஆண்டு முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
ககன்யான் விண்வெளித் திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு விண்வெளிக்குப் புறப்படும் இந்திய வீரர்கள், 400 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பூமி திரும்புவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தரையிறங்கிக் கோலோச்சியுள்ள நிலையில், நான்காவது நாடாக இந்தியாவும் அவ்வரிசையில் இடம் பெறப் போகும் அந்த வரலாற்றுப் பூர்வ நாளுக்காக 140 கோடி இந்திய மக்களும் காத்திருக்கின்றனர்