Latestமலேசியா

UN-Habitat உலக அமைப்பின் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் மலேசியா தீவிரம்; முழு வீச்சில் கடைசிக் கட்ட பிரச்சாரம்

நைரோபி, மே-24 – UN-Habitat என்றழைக்கப்படும் ஐநாவின் மனிதக் குடியேற்றத் திட்டத்திற்கான மாநாட்டு தலைவர் பொறுப்பைப் கைப்பற்றுவதில், மலேசியா கடைசிக் கட்ட பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தலைமையிலான மலேசியப் பேராளர் குழு கென்யா, நைரோபியில் முழு வீச்சில் அப்பணிகளை மேற்கொண்டுள்ளது.

அங்கு நடைபெறும் UN-Habitat பொதுப்பேரவையில் 2026-2029 தவணைக்கான புதியத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.

உள்ளூர் நேரப்படி இன்று பின்னேரம் முடிவு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுறது.

இதையடுத்து வெற்றி வாய்ப்பைப் பிரகாசப்படுத்தும் நோக்கில், பல்வேறு முக்கியப் பங்காளி நாடுகளுடன் ஙா கோர் மிங் அடுத்தடுத்து இரு வழி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

சீனா, UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசு, மெக்சிகோ, ஈரான், அசர்பைஜான் உள்ளிட்ட நாடுகளும் அவற்றிலடங்கும்.

UN-Habitat என்பது நிலைத்தன்மை மிக்க நகரங்களின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் ஐநாவின் துணை அமைப்பாகும்.

அவ்வமைப்புக்கு மலேசியா தலைவரானால், உலகளவில் நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் நாடு முக்கியப் பங்காற்ற முடியுமென ஙா கோர் மிங் சொன்னார்.

உலக அமைப்புகள் எதிலும் நீண்ட காலமாக மலேசியா தலைமையேற்கவில்லை.

ஆகக் கடைசியாக 1996-ஆம் ஆண்டு, தான் ஸ்ரீ ரசாலி இஸ்மாயில் 51-ஆவது ஐநா பொதுப் பேரவையின் தலைவராக இருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!