
குவாந்தான், பிப்ரவரி-3-அரச மன்னிப்பும் தண்டனைக் குறைப்பும் பலர் நினைப்பது போல் பரிசோ அல்லது தனிப்பட்ட சலுகையோ கிடையாது, மாறாக அது அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான நடைமுறை என பஹாங் சுல்தான் தெளிவுபடுத்தியுள்ளார்.
மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது சட்டத்தின் ஒரு பகுதியாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்றும் அல்-சுல்தான் அப்துல்லா வலியுறுத்தினார்.
“மன்னிப்புகள், மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனைக்குப் பிறகே பரிசீலிக்கப்படுகின்றன; இதனால் சீர்திருத்தமும் சமநிலையும் உறுதிச் செய்யப்படுகின்றன. தண்டனை மிகுதியானதாக இருக்கும் சூழ்நிலைகளில், நீதி மற்றும் கருணையை நிலைநிறுத்தும் நோக்கத்தில்தான் மன்னிப்புகள் வழங்கப்படுகின்றன, மாறாக அரசியல் நலனுக்காக அல்ல” என அவர் சுட்டிக் காட்டினார்.
முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், மலேசிய மன்னராட்சி முறை அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில்தான் செயல்படுகிறது என்பதையும் அவர் நினைவூட்டினார்.
16-ஆவது மாமன்னராக இருந்த போது, SRC International ஊழல் வழக்கில் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் தண்டனையை அல்-சுல்தான் அப்துல்லா பாதியாகக் குறைத்தது நினைவிருக்கலாம்.
நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்க அவர் கூடுதல் உத்தரவைப் பிறப்பித்தார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



