
அலோர் ஸ்டார், பிப்ரவரி 3 – பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அவரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது உறவினரான 28 வயதுடைய இளைஞனைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக ஆடவன், நேற்று இரவு, வட–தெற்கு நெடுஞ்சாலையில், சிலாங்கூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
போலீசார் மேற்கொண்ட பரிசோதனையில் அவன் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டாலும் அவனுக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதென்று கோத்தா ஸ்டார் மாவட்ட காவல் துறை தலைவர், Assistant Commissioner Syed Basri Syed Ali தெரிவித்தார்.
மேலும் இந்தக் கைது நடவடிக்கை கெடா மாநில காவல் பிரிவும் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த அப்பெண்மணி தாமான் சுல்தான் அப்துல் ஹாலிம் பகுதியில் உள்ள தனது வீட்டில் மூன்று குத்துக் காயங்களுடன் நேற்று கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அக்கொலையாளி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி வரை அவனைத் தடுப்பு காவலில் வைப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.



