
கோலாலம்பூர், ஆகஸ்ட்-3,
இடைநிலைக் கல்வியைக் கட்டாயமாக்கும் அரசாங்கத்தின் முடிவை, CUMIG எனப்படும் மலாயாப் பல்கலைக்கழ இந்திய பட்டதாரிகள் அமைப்பு வரவேற்றுள்ளது.
கல்வியைப் பாதியிலேயே கைவிடுவதைத் தடுத்து, ஒவ்வொரு மாணவரும் குறைந்தது SPM வரையாவது படித்து தேர்வில் அமருவதை இது உறுதிச் செய்யும்.
இதுவொரு தைரியமான, முன்னேற்றகரமான நடவடிக்கையாகும்.
என்றாலும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்விச் சூழல் அமைவதில்லை; கற்றல் முறைகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி உண்டு.
எனவே, நடப்பிலுள்ள இடைநிலைப்பள்ளிகள் கருப்பொருள் சார்ந்த கிளஸ்டர் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டுமன CUMIG பரிந்துரைத்துள்ளது.
அதாவது, மாணவர்கள் தத்தம் ஆர்வத்துக்கும் வலிமைக்கும் ஏற்ற கல்வியைத் தேர்ந்துடுத்து படிக்க வாய்ப்பு வழங்குவதாகும்.
அவ்வகையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவறை உள்ளடக்கிய STEM பள்ளிகள், நிதி மற்றும் பொருளாதாரப் பள்ளிகள், கலை மற்றும் சமூக அறிவியல் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சியான TVET பள்ளிகளாக பிரிக்கலாம்.
இது, அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கியக் கல்வி முறையாக இருக்கும்.
இவ்வேளையில், மாணவர்கள் இடைநிலைக் கல்வியை நிறைவுச் செய்யவில்லை என்றால் பெற்றோர்களுக்கு 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுவது குறித்து CUMIG கவலைத் தெரிவித்தது.
இது பெற்றோரின் அலட்சியப் போக்கைத் தடுப்பதற்காக என்றாலும், ஆணிவேராக உள்ள பிரச்னையில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டியதே முக்கியமாகும்.
மாணவர்கள் பாதியிலேயே படிப்பைக் கைவிடும் சம்பவங்கள் பெரும்பாலும் சமூகப் பொருளாதாரச் சவால்கள், ஏழ்மை, கற்றல் பிரச்னை, மனரீதியான பிரச்னை போன்றவற்றுடன் தொடர்புடையவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என CUMIG சுட்டிக் காட்டியது.