
கோலாலம்பூர், செப்டம்பர்-12 – மலேசியாவில் இந்திய வீட்டுப் பணிப்பெண்கள் ஆட்சேர்ப்பு தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல இந்தியப் பெண்கள், குறிப்பாக முகவர்கள் மூலம் சட்டவிரோதமாக மலேசியாவுக்குக் கொண்டு வரப்படுவதாகவும், சிலர் விசா இல்லா நுழைவு முறையை தவறாக பயன்படுத்துவதாகவும் தூதரகம் எச்சரித்துள்ளது.
இது குடிநுழைவுச் சட்டங்களையும் வேலைவாய்ப்பு விதிகளையும் மீறுவதாகும்.
சட்டப்படி, மலேசியாவில் வேலைக்கு வர விரும்பும் இந்தியர்கள் Visa With Reference எடுத்து, அதை பின்னர் Temporary Employment Visit Pass அதாவது தற்காலிக வேலை பெர்மிட் அனுமதியாக மாற்ற வேண்டும்.
தவிர, ஆட்சேர்ப்பு நடவடிக்கையும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட 9 நிறுவனங்கள் மூலமே செய்ய முடியும்.
அவற்றில், கேரளாவின் NORKA Roots, தமிழகத்தின் OMCL, மற்றும் தெலுங்கானாவின் TOMCOM உள்ளிட்டவை அடங்கும்.
முக்கியமாக, 30 வயதுக்குக் குறைவான பெண்கள், அல்லது ECR கடப்பிதழ் வைத்துள்ளவர்கள், வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களாக அனுப்பப்பட கூடாது எனவும் இந்திய அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய – மலேசிய அரசாங்கங்கள் 2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி, தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலன், மற்றும் சுரண்டலிலிருந்து காப்பதற்கான பொறுப்பு இரு அரசுகளுக்கும் உள்ளது.
இந்நிலையில், இந்திய நாட்டுப் பெண்களை வேலைக்குத் தருவிக்கும் மலேசிய முதலாளிகள், eMigrate முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், இந்தியத் தூதரகம் வலியுறுத்தியது.