
கோலாலம்பூர், அக்டோபர் 25 – கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (EKVE) பிரிவு 1இல் டோல் கட்டண வசூல் அக்டோபர் 25, 12.01 மணி முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி திறக்கப்பட்டதிலிருந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு பயணிகள் இலவசமாக பயன்படுத்திய சலுகை இன்றுடன் முடிவடைகிறது.
இந்த டோல் வசூல் EKVE நெடுஞ்சாலையின் முழுமையான செயல்பாட்டு கட்டத்தை குறிக்கிறது எனவும், அது அம்பாங், ஹுலு லங்காட் மற்றும் சுங்கை லாங் பகுதிகளை இணைக்கும் முக்கிய பாதை எனவும் EKVE நிறுவனம் தெரிவித்துள்ளது.
மடானி அரசு, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கட்டணமில்லா டோல் சலுகையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இனி EKVE பிரிவு 1இல், டோல் கட்டணம் முற்றிலும் மின் கட்டண (electronic toll) முறையில் வசூலிக்கப்படும் என்றும் அதற்காக Touch ‘n Go கார்டு, SmartTAG மற்றும் RFID (Radio Frequency Identification) பயன்படுத்தப்பட வேண்டும் என அறியப்படுகின்றது.
இந்நிலையில் பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் டோல் பிளாசாவிலுள்ள வழிகாட்டி பலகைகளை பின்பற்றுமாறு EKVE நெடுஞ்சாலை மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது.



