
சிரம்பான், ஜனவரி-27 – ‘ஒருதலைபட்சமாக இஸ்லாத்துக்கு மதமாற்றம்’ செய்யப்பட்டதாகக் கூறி பெண்ணொருவர் தொடுத்த வழக்கை விசாரிக்க சிரம்பான் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
47 வயது அப்பெண்ணை, 4 வயதில் அவரது தந்தை இஸ்லாத்துக்கு மதம் மாற்றியுள்ளார்.
ஆனால், அத்தையிடம் வளர்ந்த தாம் ஒருபோதும் இரண்டாவது Kalimah Syahadah-வ உச்சரித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதில்லை என்பதாலும், எந்நாளும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை வாழ்ந்ததில்லை என்பதாலும், தாம் ஒருபோதும் முஸ்லீம் அல்ல என அறிவிக்குமாறு கோரி சிவில் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
ஆனால் நீதிபதி Wan Fadhilah Nor Wan Idris-சோ, “அப்பெண் முஸ்லீமே அல்ல என சொல்லும் வழக்கல்ல இது” எனத் தீர்ப்பளித்து, வழக்கை தள்ளுபடி செய்தார்.
தவிர, பிரதிவாதிகளான நெகிரி செம்பிலான் இஸ்லாமிய மன்றம், தேசிய பதிவிலாகா, மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு செலவுத் தொகையாக 4,000 ரிங்கிட்டை வழங்க வேண்டும் எனவும் அப்பெண்ணுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வேளையில், இஸ்லாத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்பினால், ஷரியா நீதிமன்றத்தை நாட வேண்டும் என்பதையே நீதிபதியின் அத்தீர்ப்பு உணர்த்துவதாக, அப்பெண்ணின் வழக்கறிஞர் கூறினார்.
இந்தத் தீர்ப்பு, மலேசியாவில் ஒருதலைப்பட்ச மதமாற்றங்கள் மற்றும் சிவில் – ஷரியா நீதிமன்றங்களின் அதிகார வரையறைகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.



