
கோலாலம்பூர், மார்ச்-7 – ஏரா எஃ.எம் வானொலியின் ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சை சற்று தணியும் நேரத்தில், மதங்களுக்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
விஜயன் சவரிநாதன் என்பவர் தனது facebook நேரலையில் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களைப் பற்றியும் படுமோசமாக இழிவுப்படுத்தியுள்ளார்.
தொடர்புப் பாலமாக விளங்க வேண்டிய சமூக ஊடகங்களில் இது போன்ற இன-மத வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது வேதனையளிப்பதாக, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கூறினார்.
பொறுப்பற்ற சிலரின் இதுபோன்ற செயல்களால் சமூகத்துக்கும் வெட்கக்கேடு.
3R எனப்படும் இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்களை யார் நிந்தனைச் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
இதில் பாகுபாடோ பாரபட்சமோ கிடையாது என, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான சிவகுமார் கூறினார்.
ஆக, பின்விளைவுகளை உணராமல் இன்னோர் மதம் குறித்து facebook-கில் உளறிக் கொட்டியுள்ள இந்த இந்திய ஆடவரும் சட்ட நடவடிக்கையைச் சந்தித்தே ஆக வேண்டும்.
1998-ஆம் ஆண்டு தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய வேண்டுமென சிவகுமார் வலியுறுத்தினார்.
அதே சமயம் இது போன்ற சம்பவங்கள் சமூக ஊடகங்களில் நடக்காதிருப்பதை உறுதிச் செய்ய அதிகாரப்புத் தரப்பு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
AI அதிநவீன தொழில்நுட்பம் வந்து விட்ட இக்காலக்கட்டத்தில் அதன் உதவியுடன் சமூக ஊடகங்களைக் கண்காணிக்க முடியாதா?
தவறு நடந்த பிறகு அதற்கு தண்டனை வழங்குவது மட்டுமே பிரச்னைக்குத் தீர்வாகி விடாது.
மாறாக, அது மீண்டும் மீண்டும் நடப்பதைத் தடுக்க அதிகாரத் தரப்பு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கேண்டும்.
இல்லையென்றால் மக்கள் தான் அதன் பின்விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என சிவகுமார் நினைவுறுத்தினார்.