
வாஷிங்டன், மார்ச்-26-அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமாகியுள்ளது.
இரு தரப்புமே கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் திட்டவட்டமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
போரில் ஈரான் தோல்வியை ஏற்க மறுத்தால், அதற்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தயாராக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் வழியாக 15-அம்ச அமைதித் திட்டம் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் “பயனுள்ளதாக” இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஆனால், கடைசியில் ஈரான் மட்டும் இணங்காவிட்டால் அதற்கு “நரகம்” காத்திருக்கிறது என வெள்ளை மாளிகை கடுமையான தொனியில் எச்சரித்தது.
“நடப்பு சூழலை புரிந்துகொண்டு, நிதர்சனத்தை ஏற்காமல் ஈரான் தப்புக் கணக்குப் போட்டால், மொத்த நாடும் நிர்மூலம் ஆகி விடும்” வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் Karoline Leavitt கூறினார்.
நிலைமை இவ்வாறிருக்க, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியோ, பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமே இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளர்.
“இப்போது பேச்சுவார்த்தை பற்றி பேசுவது, தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம்” என்றார் அவர்.
ஈரான் தனது பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி விட்டதாகவும், அந்த இஸ்லாமிய குடியரசை சீண்டுபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இப்படி, ஒருபக்கம் அமெரிக்கா பேச்சுவார்த்தையை வலியுறுத்த, மறுபக்கம் ஈரான் அதை முற்றிலும் மறுக்கும் நிலையில், இரு தரப்புகளுக்கிடையிலான இடைவெளி மேலும் மேலும் பெரிதாகி வருகிறது.
பிப்ரவரி இறுதியில் தொடங்கிய மோதல் இன்னும் தொடரும் நிலையில், உலகம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி காத்திருக்கிறது…



