
மெர்லிமாவ், ஜூன்-27 – 18-ஆவது மலேசிய ஃபிரா ரோபோ உலகக் கிண்ணம் 2025 போட்டி, உயர் தாக்கங்களைக் கொண்டு வரக்கூடிய ரோபோட்டிக் கண்டுபிடிப்புக்கான சிறந்தக் களமாகும்.
போலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரிகளுக்கான கல்வித் துறையான JPPKK அதனை ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டி அதிநவீன AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் ரோபோட்டிக்ஸ் துறையில் ஒரு புதுமைப் ‘போரை’ வெளிப்படுத்துமென, JPPKK-வின் துணைத் தலைமை இயக்குநர் Dr ஷம்சுரி அப்துல்லா கூறினார்.
மலாக்கா மெர்லிமாவ் போலிடெக்னிக் கல்லூரியில் இந்த 18-ஆவது மலேசிய ஃபிரா ரோபோ உலகக் கிண்ணம் 2025 போட்டியைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் அவ்வாறு சொன்னார்.
“இப்போது ரோபோடிக்ஸ் மற்றும் AI போன்ற தொழில்நுட்பங்கள் வெறும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல; மாறாக செயல்முறையிலான hands-on கற்றல், தொழில்துறையில் நேரடி அனுபவம் மற்றும் சந்தைத் தேவைக்கு ஏற்ப உள்ள பயிற்சிகள் மூலம் இவை அனைவரையும் சென்றடையக்கூடியதாக மாறியுள்ளன.
இந்தப் போட்டி, நம் மாணவர்கள் தொழில்நுட்பங்களில் வெறும் பயனர்களாக இல்லால், படைப்பாளிகளாக உருவாகி வருவதை நிரூபிக்கும் நேரடி சான்றாகும் என்றார் அவர்.
ஜூன் 21 தொடங்கி 26 வரை நடைபெற்ற இப்போட்டியில் 439 குழுக்களைச் சேர்ந்த 1,613 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
64 போலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரிகள், 12 அரசாங்க – தனியார் உயர் கல்விக் கூடங்கள், 48 பள்ளிகள் என நாடு முழுவதுமிருந்து மொத்தம் 124 கல்வி நிறுவனங்களிலிருந்து அவர்கள் வந்திருந்தார்கள்.
Simurosot, AiBot, HuroCup, MyBot Youth, Robosot, Androsot, Air Drone உள்ளிட்ட 9 முதன்மைப் பிரிவுகளிலும் 25 துணைப் பிரிவுகளிலும், 5 இணைப் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தோனேசியா, கொரியா, சீனா, ஜப்பான், இந்தியா, வங்காளதேசம், சூடான் இகிய நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றது சிறப்பம்சமாகும்.
ஒவ்வொரு பிரிவிலும் வாகை சூடியவர்கள், கனடாவில் நடைபெறவிருக்கும் FIRA Roboworld Cup 2026 போட்டியில் நாட்டை பிரதிநிக்கும் வாய்ப்பைப் பெறுவர்