
கோலாலம்பூர், மார்ச்-8 – ஊழல் விசாரணைகளில் சமநிலை அவசியம் என, பி.கே.ஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
விசாரணைகள் நியாயமாகவும், தனிமனித உரிமையை மதிக்கும் வகையிலும் நடைபெற வேண்டும்.
இல்லையென்றால், மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
விசாரணைகள் எல்லை மீறியதாகவோ, அரசியல் நோக்கத்தைக் கொண்டதாகவோ இருத்தல் கூடாது.
விசாரணைக்கு உட்படுத்தப்படுவோரின் தனிப்பட்ட விவரங்களும் தேவையில்லாமல் வெளியிடப்படுதல் கூடாது.
எனவே தான், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மீது நாடாளுமன்ற கண்காணிப்பு அவசியம் எனவும், அவ்வாறு செய்தால் தான் விசாரணைகளின் நம்பகத்தன்மை உயரும் எனவும் இசா தெரிவித்தார்.
“அமுலாக்க நிறுவனங்களின் விசாரணைகள் வலுவாக இருக்க வேண்டும், ஆனால் மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் சமநிலையும் அவசியம்” என்றார் அவர்.
RM1.1 பில்லியன் மதிப்புள்ள Arm Holdings ஒப்பந்தம் தொடர்பில் MACC விசாரணை நடந்து வரும் நிலையில் நூருல் இசாவின் கருத்து வெளியாகியுள்ளது.
இந்த Arm விசாரணை முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பலரை உட்படுத்தியுள்ளது.



