
கோலாலம்பூர், மே 13 – MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்கு தாம் தயாராய் இருப்பதாகவும், அரசியல காழ்ப்புணரச்சி அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை தொடர்பில் தாம் அமைதியாக இருக்கப் போவதில்லையென உரிமை கட்சியின் தலைவரும் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணையமைச்சருமான பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமி தெரிவித்துள்ளார்
தன் மீது எம்.ஏ.சி.சி நாளை பட்டர்வெர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும் என அறிவித்துள்ளபோதிலும் அந்த குற்றச்சாட்டுக்கள் மீதான விவரங்கள் எதுவும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
எனினும் அவை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக 13 ஆண்டு காலம் தாம் பதவி வகித்ததன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதை புரிந்துகொண்டிருப்பதாக ராமசாமி கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் MACC-யில் தாக்கல் செய்யப்பட்ட அண்மைய அறிக்கைகளிலிருந்து தோன்றியதாக தெரிகிறது. பினாங்கு இந்து அறவாரியத்தின் நிதிகளை நிர்வகிப்பது, குறிப்பாக இந்திய சமூகத்தின் நலன் மற்றும் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் மற்றும் தங்கத் தேர் குறித்து எழுப்பப்பட்ட விவகாரம் சம்பந்தப்பட்டவைகளாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மடானி அரசாங்கத்தை தாம் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது , சீர்திருத்த இயக்கத்தின் கொள்கைகளை அன்வார் நிலைநிறுத்தத் தவறியது, குடும்ப உறுப்பினர்களை, குறிப்பாக அவரது மகள் நூருல் இஷாவை பதவி உயர்வு செய்யும் அவரது கேள்விக்குரிய நடைமுறைக்கும் எதிராக தாம் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருவதால் தனக்கு எதிராக அரசியல் துன்புறுத்தல் நடவடிக்கையே இதுவென ராமசாமி தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை தாம் தீவிரமாக எதிர்த்துப் போராடத் தயாராக இருப்பதாகவும் , அரசு நிறுவனங்களை அரசியல் பழிவாங்கும் கருவிகளாகப் பயன்படுத்த முயற்சிப்பதால் தாம் அஞ்சப்போவதில்லை என்றும் இன்று வெளியிட்ட அறிக்கையில் ராமசாமி தெரிவித்தார்.