
கோலாலம்பூர், ஜூலை 9 – மலேசிய தென்றல் வாசகர் இயக்கத் தலைவரும், எழுத்தாளருமான செந்தமிழ்ச் செம்மல் சி. தென்னரசு நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது மறைவு, மலேசியத் தமிழ்ப் பணியில் ஈடுபட்ட இலக்கியவாதிகள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரிடமும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது முதல் படைப்பு 1986ஆம் ஆண்டு “வானம்பாடி ஜூனியர்” பக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தென்றல் வார இதழ் மற்றும் வானம்பாடி இதழ்களிலும் எழுதிய படைப்புகள், நேர்காணல்கள் மற்றும் இலக்கியச் சிந்தனைகள், தமிழ் வாசகர்கள் மனதில் நிலைத்து நின்றன.
தமிழைப் பரப்பும் பணியில் அவர் மேற்கொண்ட மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்று, தென்றல் வார இதழின் கெடா முதல் ஜோகூர் வரை நடைபெற்ற “தென்றல் தொடர்பயணம்” நிகழ்ச்சி.
இதன்வழி தமிழைப் பேணும் எண்ணத்துடன், ஒவ்வொரு மாநிலத்திலும் வாசகர்களை உருவாக்கி வாசிக்கும் பழக்கத்திற்கு புரட்சியை ஏற்படுத்தினார்.
தென்னரசு அவர்களின் இறுதி சடங்கு நாளை ஜூலை 10 ஆம்தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, No. 9, Jalan Sri Bangi 2, Taman Sri Bangi 2, 43000 Kajang, Selangor D.E என்ற முகவரியில் நடைபெறும்.
அதன்பின்னர் அவரது நல்லுடல் செராஸ் ஜாலான் குவாரி மின்சுடலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படும்.