
பத்து பஹாட், மார்ச் 13- வர்த்தக வளாகத்தின் கழிப்பறையில் ஒருவர் மலம் கழிப்பதை கை தொலைபேசியில் வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தொழிற்சாலை மேற்பார்வையாளருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
குற்றவியல் சட்டத்தின் 509 ஆவது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 31 வயதான நபர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நூராசிதா ரஹ்மான் ( Nurasidah Rahman ) இந்த அபராதத்தை விதித்தார்.
இம்மாதம் 11 ஆம்தேதி மாலை மணி 5.15 அளவில் பத்து பாஹாட் Taman Flora utama வர்த்தக வளாகத்தின் கழிப்பறையில் 32 வயது ஆடவர் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
தம்மை படம் பிடிப்பதை உணர்ந்த புகார்தாரர் சம்பந்தப்பட்ட நபரை பாதுகாவலரின் உதவியோடு விரட்டிப் பிடித்ததோடு தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.
அந்த நபர் வைத்திருந்த தொலைபேசியை சோதனை செய்தபோது அதில் வீடியோ எடுக்கப்பட்டிருந்த காட்சி இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.



