
கெரிக், டிசம்பர்-15 – பேராக், கெரிக்கில் காட்டு யானை இழுத்ததில் ஓராங் அஸ்லி பூர்வக்குடி ஆடவர் பள்ளத்தில் விழுந்து காயமுற்றார்.
சனிக்கிழமை காலை 9 மணியளவில் Jalan Kampung Pengkalan Permai பூர்வக்குடி கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது 34 வயது அவ்வாடவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், அவரின் தம்பியும் நண்பரும் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் காட்டுக்கு இரைத் தேடிச் சென்றனர்.
சம்பவ இடத்தை நெருங்கிய போது, சாலையோரமாக காட்டு யானை நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வாடவர், யானையைத் தாண்டிச் செல்லும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார்.
எனினும், யானை திடீரென தும்பிக்கையால் அவ்வாடவரைப் பிடித்து இழுக்க, நிலைத் தடுமாறி அவர் பள்ளத்தில் உருண்டு விழுந்தார்.
அதில் முகத்திலும் உடம்பிலும் காயமடைந்த அந்நபர், தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
யானையைக் கண்டதுமே சற்று தொலைவிலேயே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டதால், அவரின் தம்பியும் பின்னால் அமர்ந்திருந்த நண்பரும் யானையிடமிருந்து தப்பினர்.



