
கிள்ளான், மார்ச் 16-கிள்ளான் – புக்கிட் படாக் ரயில் தண்டவாள வழித் தடத்தில்
ஆடவன் ஒருவன் கேபில் திருடுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. மலேயன் ரயில்வே பெர்ஹாட்டின் குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த உதவி போலீஸ்காரர்களால் அந்த நபர் கைது செய்யப்பட்டான்.
33.756 ஆவது கிலோமீட்டரில் அடிக்கடி கேபிள்கள் திருடும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட ஆடவன் ஒருவன் திடீரென தப்பியோட முயன்றபோது உதவி போலீஸ்காரர்கள் அவனை வெற்றிகாரமாக கைது செய்ததாக மலேயன் ரயில்வே பெர்ஹாட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது ATP எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்புக்கான 10 மீட்டர் நீளமுள்ள கேபில் சுருள், KTMB நிறுவனத்தின் இரண்டு டிராக் கிளிப்புகள் மற்றும் கேபிளை வெட்டப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபர் தென் கிள்ளான் போலீஸ் தலைமையகத்தின் அதிகாரிகளிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளான். குற்றவியல் சட்டத்தின் 379 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ரயில் தண்டவாள உள் கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் ரயில்களின் சீரான போக்குவரத்து சேவையை எப்போதும் உறுதிப்படுத்துவற்கும் KTMB நிறுவனத்தின் உதவி போலீஸ் குழுவினர் ரோந்து நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவார்கள் என அறிவிக்கப்பட்டது.



