
ஆயர் ஹீத்தாம் கெடா, ஜனவரி 23 – கெடா ஆயர் ஹீத்தாம் பகுதியில் உள்ள Kampung Simpang 4 Kerpan-இல், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு கடை-வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிலிருந்து 13 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் என்று மூத்த தீயணைப்பு நடவடிக்கைத் தலைவர் Ahmad Aminuddin Abd Rahim தெரிவித்தார். அவர்களுக்கு துணையாக, ஒன்பது தன்னார்வ தீயணைப்பு படைகளைச் சேர்ந்த 40 பேர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கெடா மாநில தீயணைப்பு துறை தலைமை அதிகாரி வழங்கிய உத்தரவின் பேரில், ஜித்ரா நிலையத்திலிருந்தும் அருகிலுள்ள தன்னார்வ தீயணைப்பு படைகளிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
சம்பவ இடத்துக்கு வந்தபோது, ஆறு கடை-வீடுகள் தீப்பிடித்திருந்ததாகவும், தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் சுமார் 80 விழுக்காடு எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதனிடையே தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திலேயே தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



