
புத்ராஜெயா, ஜூலை-1- 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் நிரப்பப்பட்ட தோம்பில் உடல் கண்டெடுக்கப்பட்ட அரசுத் தரப்புத் துணைத் தலைமை வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கேவின் மொராய்ஸ் கொலை வழக்கில், முன்னாள் இராணுவ உடற்கூறு நிபுணரின் மரண தண்டனை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், 62 வயது கர்னல் Dr ஆர். குணசேகரனுக்கு வழங்கிய மரண தண்டனையை, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 3 நீதிபதிகள் குழு ஏகமனதாக அம்முடிவை அறிவித்தது.
தனது கட்சிக்காரர் மேல்முறையீட்டை மீட்டுக் கொண்டு, மரண தண்டனையை ஏற்றுக் கொள்ள விரும்புவதாக, குணசேகரனின் வழக்கறிஞர் டத்தோ என். சிவநாதன், முன்னதாக நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிமன்றம் அவரது மரண தண்டனையை நிலைநிறுத்தியது.
இவ்வேளையில், இந்தக் குற்றத்தைச் செய்ததற்காக 32 வயது எஸ். நிமலன், 54 வயது எஸ். ரவி சந்திரா ஆகியோருக்கு, முறையே 35 மற்றும் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நிமலனுக்கு 12 பிரம்படிகள் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது; எனினும், ரவி அவரது வயது காரணமாக பிரம்படியிலிருந்து தப்பித்தார்.
மேல்முறையீடு செய்திருந்த மேலும் மூவரான ஆர். தினேஷ்வரன், ஏ.கே. தினேஷ் குமார் மற்றும் எம். விஸ்வநாத் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அரசு தரப்பு முகாந்திரம் இருப்பதை நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேவின் கடைசியாக 2015 செப்டம்பர் 4-ங்காம் தேதி கோலாலம்பூரின் மெனாரா டூத்தாவிலிருந்த தனது அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து, புத்ராஜெயாவில் உள்ள சட்டத் துறை அலுவலகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு புரோட்டோன் பெர்டானா காரில் சென்றார்.
அதே ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி சுபாங் ஜெயாவில் கான்கிரீட் நிரப்பப்பட்ட தோம்பில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.