
கோத்தா பாரு, நவ 5 – 3.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பர கைப்பைகள் மற்றும் காலணிகளை கடத்திய கும்பலை போலீசார் முறியடித்ததாக பொது நடவடிக்கை குழுவின் அதிகாரி Datuk Nik Ros Azhan Nik Abd Hamid தெரிவித்திருக்கிறார்.
தானா மேரா, ஜாலான் இஸ்மாயில் பெட்ராவில் பிற்பகல் மணி 1.30 அளவில் சந்தேகத்திற்குரிய லோரியை தடுத்து நிறுத்தியபோது தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Nike, Adidas, Timberland வகைகளைக் கொண்ட 9,369 ஜோடி காலணிகளும் , LV, Chanel, Coach ஆகிய போலி பிராண்டுகளைக் கொண்ட கைப்பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசிய சந்தைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கடத்தல் பொருள்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவையாகும். எந்தவொரு ஆவணங்கள் எதுவுமின்றி இந்த பொருட்களை கொண்டுவந்த லோரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதோடு அந்த லோரியும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக என நிக் ரோஸ் கூறினார்.
இதனிடையே பாசீர் மாஸில் Kampung Machang Gacoh Merantiயில் அதிகாலை இரண்டு மணியளவில் லோரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்டதாக நம்பப்படும் 175,500 ரிங்கிட் மதிப்புள்ள 13 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அந்த லோரி ஓட்டுனரும் கைது செய்யப்பட்டார்.