
சுங்கை பூலோ, ஜூன்-30 – சிலாங்கூர் சுங்கை பூலோவில் 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது கோல்ஃபீல்ட்ஸ் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்.
ஏற்கனவே 2 கும்பாபிஷேகங்களை நடத்தி முடித்துள்ள அக்கோயில், மூன்றாவது கும்பாபிஷேகத்திற்கான பணிகளை 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
அவ்வகையில் ஆலயத் திருப்பணிகள் 80 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளன; எஞ்சிய 20 விழுக்காட்டுப் பணிகளை முழுமைப் பெறச் செய்ய கோவில் நிர்வாகத்துக்கு பெரும் நிதித் தேவைப்படுகிறது.
இதையடுத்து ஜூன் 28-ஆம் தேதி, சுங்கை பூலோ, ரஹ்மாண் புத்ரா கிளப்பின் மாநாட்டு விருந்து மண்டபத்தில் நன்கொடைத் திரட்டும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாடின் சிறப்பு அதிகாரி ஹாஜி ஃபைசால் சிறப்பு வருகைப் புரிந்தார்.
கோலாலாம்பூர் பெரிய மருத்துவமனையின் திருமுருகன் ஆலயத் தலைவர் டத்தோ சுரேஷ், மலேசிய மக்கள் சக்திக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் முன்பு 30,000 ரிங்கிட்டை ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கியதோடு, மேலும் 30,000 ரிங்கிட்டை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆனால், கும்பாபிஷேக திருப்பணிகளை முடிக்க மேலும் நிதியுதவி அவசரமாகத் தேவைப்படுவதாக, டத்தோ ஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
குறிப்பாக டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் பெரிய மனது வைத்து ஒரு பெருந்தொகையை நன்கொடையாக வழங்குவார் என எதிர்பார்ப்பதாக, தனேந்திரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கும்பாபிஷேகம் அடுத்தாண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; இந்நிலையில் அதற்குள் திருப்பணிகளை முடிக்க 300,000 ரிங்கிட் நிதி தேவைப்படுவதாக, ஆலயத் தலைவர் மணிவண்ணன் கிருஷ்ணன் கூறினார்.
ஆலய வளர்ச்சிப் பணிகளுக்கு உதவி வரும் பொது மக்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும், ஆலயத்தின் ஆலோசகரும், கும்பாபிஷேக ஒருங்கிணைப்பாளருமான தமிழ்வாணி கருணாநிதி நன்றித் தெரிவித்தார்.
130 ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்டுள்ள கோல்ஃபீல்ட்ஸ் தோட்ட மாரியம்மன் ஆலயத்தின் திருப்பணிகள் சிறப்புடன் நடைபெற பொது மக்களும் தனியார் நிறுவனங்களும் நன்கொடை அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.