
செப்பாங், மார்ச் 11-கே.எல்.ஐ.ஏ வில் சட்டவிரோதமாக வாடகை கார் சேவையை வழங்கியதற்காக, ஆடவர் ஒருவரை கைது செய்த சாலை போக்குவரத்துத்துறை அவரது புரோடுவா அல்சா காரையும் பறிமுதல் செய்தது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் விளைவாக உரிமம் பெறாத அல்லது சட்டவிரோத வாடகை கார் சேவைகளை வழங்குவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் சாலை போக்குவரத்துத்துறை இயக்குனர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.
அந்த கார் ஓட்டுநர் ‘ மூன்று வங்கதேச பயணிகளை கே.எல்.ஐ.ஏ முதலாவது முனையத்திலிருந்து கோலாலம்பூர் (TBS), பேருந்து முனையம்வரை 65 ரிங்கிட் கட்டணத்தில் வற்புறுத்தி, போக்குவரத்து சேவைகளை வழங்கியது கண்டறியப்பட்டது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட எவருக்கும் தரைப் பொது போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படலாம், KLIA வில் 1ஆவது மற்றும் 2ஆவது முனையங்களில் முகப்பிடச் சேவை மூலம் மின்-ஹெய்லிங் விண்ணப்பம் வாயிலாக முன்பதிவு செய்து சட்டப்பூர்வ போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும்படி பொதுமக்களை அஸ்ரின் வலியுறுத்தினார்.



