
சதுரங்கப் போட்டி 2026 – பினாங்கு பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி & தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளி வெற்றி
செபராங் ஜெயா, பிப்ரவரி 13 –
கடந்த ஞாயிற்றுக்கிழமை செபராங் ஜெயாவில் உள்ள லைட் ஹோட்டலில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி 2026, மாணவர்களின் அறிவுத்திறன், ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பாங்கை வளர்க்கும் சிறப்புமிக்க நிகழ்வாக வெற்றிகரமாக நிறைவடைந்தது.
YB செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் (YB Senator Dr.Lingeshwaran) ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சதுரங்க போட்டியில் ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் சில சர்வதேச கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்தப் போட்டி, 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு, 12 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு மற்றும் 17 வயதுக்குட்பட்ட திறந்த பிரிவு என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் போட்டியாளர்கள் தங்களது தந்திரத் திறன், கவனச்சேர்ப்பு மற்றும் தீர்மானிக்கும் திறனை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
போட்டியின் நிறைவில், சிறந்த இடைநிலைப்பள்ளியாக தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளி அறிவிக்கப்பட்டது. அதேபோல், சிறந்த ஆரம்பப்பள்ளி பட்டத்தைப் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கும், தனிநபர் சாதனையாளர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வை YB லிம் ஹுய் யிங் (YB. Lim Hui Ying) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து, மாணவர்களின் முயற்சி மற்றும் திறமையை வெகுவாக பாராட்டினார். அதே நேரத்தில், இந்த அருமைமிகு நிகழ்வினை அரும்பாடுபட்டு ஏற்பாடு செய்த YB செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
மேலும், போட்டியை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், நடுவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்தச் சதுரங்கப் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி, மாணவர்களின் சிந்தனைத் திறன், தந்திர நயம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இதை வருடாந்திர நிகழ்வாக மாற்ற ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். இந்நிகழ்வு மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



