
சிங்கப்பூர், டிசம்பர் 17 – சிங்கப்பூரிலிருக்கும் உணவகம் ஒன்றில், வறுத்த மீனைச் சுவைத்து கொண்டிருந்த பெண்ணின் வாயில், திடீரென மீன் பிடிக்கும் கொக்கி ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாயில் ஏதோ குத்துவதை உணர்ந்த பெண், அதனை உடனே கையில் எடுத்து பார்த்துள்ளார். அப்பொழுதான் தெரிந்தது அது மீன் முள் அல்ல, மாறாக சுமார் 2.5 செண்டி மீட்டர் அளவில் இருக்கும் மீன் பிடிக்கும் கொக்கி என்று.
இச்சம்பவம் தொடர்பான தகவல் உணவக மேலாளருக்கு அறிவிக்கப்பட்டதுடன் உடனடியாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். மேலும் அப்பெண்மணி உண்ட உணவிற்கான முழு கட்டணத்தையும் ரத்து செய்ததுடன், மருத்துவச் செலவுகளை ஏற்கவும் அவர் முன்வந்தார்.
சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு காயமடைந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டதால் அந்தப் பெண் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பரிசோதனையில் தொற்று எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.



