
கோலாலம்பூர், ஜூன் 23 – பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா மறைந்ததன் மூலம் மலேசியா ஒரு சிறந்த கல்வியாளரை இழந்துவிட்டது என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் தோற்றுநரும் கல்வியாளருமான பேராசிரியர் டாக்டர் எம். தம்பிராஜா இன்று காலை காலமானதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
கல்வி, ஆன்மிகம் வாயிலாக இந்திய சமுதாயத்தை உயர்த்த முடியும் என்ற தூரநோக்கு சிந்தனையில் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தை டான்ஸ்ரீ தம்பிராஜா தோற்றுவித்தார்.
கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தினரிடையே மிகப் பெரிய கல்வி புரட்சியை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு வீடும் ஒரு பட்டதாரியை உருவாக்க வேண்டும் என்பது அவரது தொலைநோக்கு சிந்தனையாக இருந்தது.
அது ஒரு தலைமுறையை அணி திரட்டிய ஒரு மாபெரும் பணியாகும்.
கல்வியின் சக்தியில் அயராத அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை மூலம் அவர் பல்லாயிரக்கணக்கானோரின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தார்.
இதன் மூலம் 50,000த்திற்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்கி அவர் மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளார்.
கல்வி புரட்சியின் தந்தையாக விளங்கிய டான்ஶ்ரீ தம்பிராஜா மறைவு நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய இழப்பு என்பதோடு அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.