
கோலாலம்பூர், மார்ச் 24 – சுங்கை பெசார் (Sungai Besar), சுங்கை ஹாஜி டோரானியில் (Sungai Haji Dorani) உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறையில் நேற்று குழந்தை பிறந்ததை மறைத்து அக்குழந்தையின் உடலை வீசியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கழிப்பறை பகுதியில் சிசுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் மதியம் 12 மணியளவில் தகவல் கிடைத்ததாக சபா பெர்னாம் போலீஸ் தலைவர் யூசோப் அகமட் ( Yusof Ahmad ) தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு மருத்துவ பரிசோதனையில் அந்த சிசு இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றொரு பெண்ணுடன் பெண்கள் கழிப்பறைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் படம்பிடித்துள்ளதாக யூசோப் கூறினார்.
அவர்கள் நீல நிற பெரோடுவா பெஸ்ஸாவில் (Perodua Bezza) வருவதைக் கண்டபோதிலும் , வாகனத்தின் பதிவு எண் தெளிவாக இல்லை என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் யூசோப் அகமட் சுட்டிக்காட்டினார்.
2ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை , அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கும் தண்டனைச் சட்டத்தின் 318 ஆவது பிரிவின் கீழ் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.