
செகாமாட், செப்டம்பர்-19,
ஜோகூர், செகாமாட்டில் சீனர்களின் ஹங்ரி கோஸ்ட் (Hungry Ghost) விழாவில் பெரும் சண்டை மூண்டதில், 14 முதல் 56 வயதுக்குட்பட்ட 10 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலான இச்சண்டையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பிளாஸ்டிக் நாற்காலிகளையும் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
புதன்கிழமை இரவு, கம்போங் அப்துல்லாவில் உள்ள Padang Awam Li Chi மைதானத்தில், ஹொக்கியன் ஓப்ரா மற்றும் இசைக்குழு நிகழ்ச்சியின் போது அச்சண்டை வெடித்தது.
கைதானவர்கள், சண்டையில் ஈடுபட்டதை விசாரணையில் ஒப்புக்கொண்டதாக, செகாமாட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் DSP Ng Swie Chait தெரிவித்தார்.
சம்பவத்திற்குப் பின்னர், விழாவுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி உடனடியாக இரத்து செய்யப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.
Hungry Ghost விழாவானது இறந்த முன்னோர்களுக்கு உணவு, சடங்குகள் மற்றும் காகிதப் பணம் போன்றவற்றை வழங்கி, அவர்களை அமைதிப்படுத்தி, பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிச் செய்யும் சீனர்களின் நம்பிக்கைச் சார்ந்த வழக்கமாகும்.