
புத்ராஜெயா, ஏப்ரல்-2 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி, தனது சேவை ஒப்பந்தம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.
இன்று காலை புத்ராஜெயாவில் நடைபெற்ற MATF: Way Forward நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவர் ‘No Comment’ எனக் கூறி, சேவை ஒப்பந்தம் குறித்து எந்தவித விளக்கமும் இனி தரமாட்டேன் எனத் தெளிவுபடுத்தினார்.
வரும் மே 12-ஆம் தேதி முடிவடையவிருக்கும் அசாம் பாக்கியின் நடப்பு ஒப்பந்தம், நீட்டிக்கப்படாது, உயர் மட்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி அனைத்துலக செய்தி நிறுவனமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டது.
தனியார் நிறுவன பங்குரிமை உள்ளிட்ட புகார்களை அவர் எதிர்நோக்கியிருப்பதே அம்முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கோவிட் காலத்தில் அப்போதைப் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினால் MACC தலைவராக நியமிக்கப்பட்ட அசாம் பாக்கியின் சேவை, ஏற்கனவே 3 முறை நீடிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.



