
தோக்யோ, மார்ச்-17 – ஜப்பானில் பரபரப்புமிக்க சாலையொன்றில் சமூக ஊடகத்தின் வழி நேரலை செய்துகொண்டிருந்த 22 வயது பெண், ஓர் ஆடவரால் குத்திக் கொல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை காலையில் நிகழ்ந்த அச்சம்பவம் அப்பகுதி வாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த போலீஸ், அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டனர்.
தலை, கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக் குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம் பெண், சிகிச்சைப் பலனளிக்காது மரணமடைந்தார்.
கொலையாளியான 42 வயது ஆடவன் சம்பவ இடத்திலேயே கைதானான்; அவனிடமிருந்து கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
சமூக ஊடகப் பிரபலமான அப்பெண்ணை அவன் சரமாரியாகத் குத்துவது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
கொலைச் செய்ததை ஒப்புக் கொண்ட அவ்வாடவன், அப்பெண்ணின் நேரலையைப் பார்த்து தான் சம்பவ இடம் தேடி வந்ததாகக் கூறினான்.
மலேசிய ரிங்கிட்டுக்கு 59,828 ரொக்கத்தை உட்படுத்திய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருவருக்கும் முன்பகை இருந்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.