
ஜோகூர் பாரு, மே-8- ஜோகூர் பாருவில் போலீஸிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் ‘ஆட்டம் காட்டிய’ ஒரு ஜோடியை, 96 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீஸார் கைதுச் செய்தனர்.
ஜோகூர் பாரு செலாத்தான், ஜோகூர் பாரு உத்தாரா, ஸ்ரீ ஆலாம் போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த 14 ரோந்து வாகனங்கள் அவர்களைத் துரத்திச் சென்றன.
நேற்று அதிகாலை 1.40 மணிக்கு புரோட்டோன் வீரா காரில் வந்த 36 வயது ஆடவரின் செயல்பாடுகள், ரோந்து போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.
காரின் பின்னிருக்கையில் 34 வயது பெண் அமர்ந்திருந்தார்.
சோதனைக்காகக் காரை நிறுத்தச் சொன்ன போது அவர்கள் கேட்கவில்லை.
மாறாக, வேகமாகச் சென்றதோடு, பல நெடுஞ்சாலைகளிலும் முக்கியச் சாலைகளிலும் எதிர் திசையிலும் கார் புகுந்தோடியது.
பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் வேகம்மெடுத்த அவர்களின் கார், ஆபத்தான முறையில் பல சாலைகளில் புகுந்து கடைசியாக தஞ்சோங் லங்சாட்டில் போலீஸிடம் சிக்கியது.
கைதான இருவரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தனர்; அவ்வாடவருக்கு முறையான காரோட்டும் உரிமம் இல்லை; காருக்கும் சாலை வரி இல்லை.
போதைப்பொருள் தொடர்பில் இருவருக்கும் ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
விசாரணைக்காக இருவரும் 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்