Latestமலேசியா

துன் மகாதீரின் சுவரோவியம் அகற்றப்பட்டதற்கு புதுப்பித்தல் பணியே காரணம்; அலோர் ஸ்டார் நகராண்மைக் கழகம் விளக்கம்

அலோர் ஸ்டார், மே-30 – கெடாவில் முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட்டின் சுவரோவியம் அகற்றப்பட்டதானது, கட்டட புதுப்பித்தல் பணிகளுக்கு வழி விடுவதற்கே என, அலோர் ஸ்டார் நகராண்மைக் கழகம் MBAS தெளிவுப்படுத்தியுள்ளது.

2015-ஆம் ஆண்டு மேடான் சேனியில் வரையப்பட்ட அந்த சுவரோவியம், தற்போது மோசமடைந்து, வண்ணப்பூச்சு உரிந்து, வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது என நகர மேயர் டத்தோ அப்துல் கஃபார் யாஹ்யா கூறினார்.

சுவரை மீண்டும் வண்ணம் தீட்டவும், கட்டமைப்பு பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் கட்டட உரிமையாளர் முறைப்படி விண்ணப்பித்து அனுமதியைப் பெற்றுள்ளார்.

சுவரோவியத்தை மீண்டும் உருவாக்க அல்லது புதிய இடத்தில் அதை வைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

எனினும், இந்த சுவரோவிய அகற்றல் அரசியல் நோக்கம் கொண்டதல்ல என மேயர் வலியுறுத்தினார்.

MBAS மற்றும் கெடா சுற்றுலா மேம்பாட்டுத் துறையும் இந்த பொது கலையின் மதிப்பை அங்கீகரிப்பதாகவும், மகாதீர் போன்ற தேசப் பெருந்தலைவர்களை மதிப்பதாகவும் அப்துல் கஃபார் கூறினார்.

இவ்வேளையில், தனியார் கட்டடங்களுக்கான புதிய சுவரோவிய வழிகாட்டுதல்களை MBAS விரைவில் அறிமுகப்படுத்தும்;

இதில் உரிமையாளரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல், வடிவமைப்பிற்கான நகராண்மைக் கழகத்தின் ஒப்புதல் மற்றும் பராமரிப்புத் திட்டங்கள் ஆகியவை அதிலடங்கும் என்றார் அவர்.

மகாதீரின் சுவரோவியம் ‘காணாமல்’ போன புகைப்படங்கள், நேற்று ‘அலோர் ஸ்டார் கித்தா’ facebook பக்கத்தில் வெளியிடப்பட்டு, பொது மக்களின் கவலையைத் தூண்டின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!