
தெமர்லோ, ஜூன்-27 – பஹாங், தெமர்லோ மாவட்டத்தில் நேற்று மாலை வீசியப் புயல் காற்றில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
மாலை 5 மணிக்கு ஏற்பட்ட அச்சம்பவத்தில் மரங்களும் வேரோடு சாய்ந்ததில், வாகனங்களும் பாதிக்கப்பட்டன.
Mukim Semantan Satu, Mentakab Satu, Mentakab Dua, Bangau ஆகியவை புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
பல வீடுகளின் கூரைகள் பறந்ததோடு, மரங்கள் மின் கம்பங்களில் விழுந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
எனினும் அதில் யாருக்கும் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என, பொதுத் தற்காப்புப் படையான APM உறுதிப்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்க ஏதுவாக, தெமர்லோ சமூக நலத் துறை சேத விவரங்களை மதிப்பிட்டு வருகிறது.
இம்மாதத்தில் தெமர்லோவில் நிகழ்ந்துள்ள இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
முன்னதாக ஜூன் 10-ஆம் தேதி இதே போன்று புயல் காற்று வீசியதில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன.