
ஈப்போ, ஜூன்-19 – ஈப்போவில் நேற்று காலை மீண்டும் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது.
ஆனால் அது என்ன என்ற மர்மத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
கல் குவாரிகளில் எந்தவொரு வெடிப்பும் இல்லை என கனிம மற்றும் புவி அறிவியல் துறை உறுதிப்படுத்தியது.
அங்கு நண்பகல் முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வெடிப்புகளுக்கு அனுமதியுண்டு என அத்துறை விளக்கியது.
இந்நிலையில், அச்சம்பவத்தை போலீஸ் விசாரித்து வருவதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ACP அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மாட் கூறினார்.
உறுதியான தகவல்கள் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றார் அவர்.
பெரும் வெடிப்பு ஏற்பட்டது போன்ற அளவுக்கு அச்சத்தம் இருந்ததாக ஈப்போ குடியிருப்பாளர்கள் முன்னதாக சமூக ஊடகங்களில் கூறியிருந்தனர்.
வீடுகள் குலுங்கியதாகவும் சிலர் கூறிய வேளை, Chemor, Chepor, Tanah Hitam போன்ற இடங்களில் நேற்று காலை 10.30 மணிக்கு நிலம் அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்தாண்டு அக்டோபரில் இதே போன்று ஈப்போ மாநகரின் பல்வேறு இடங்களில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டது.
இதனால் மேரு, மஞ்சோய், ச்செமோர், சுங்கை சிப்புட் உள்ளிட்ட இடங்கள் குலுங்கின.
எனினும் இதுவரை அந்த வெடிப்புக்கான காரணம் மர்மமாகவே உள்ளது