
கோலாலம்பூர், செப் 9 – நாடு முழுவதிலும் கடந்த ஆண்டு சுமார் 45,000 பள்ளி மாணவர்கள் சிகரெட், மின் சிகரெட் அல்லது வெப் புகைப்பது சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.
இவர்களில் 44,211 இடைநிலைப் பள்ளி மாணவர்களுடன் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 230 மாணவர்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு அம்பலப்படுத்தியுள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாது நடைமுறைக்கான சுகாதார திட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களிடம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
17,172 இடைநிலைப் பள்ளி மாணவர்கள் வழக்கமான சிகரெட்டுகளை புகைப்பதாகவும், இதர 19,782 மாணவர்கள் மின் சிகரெட் அல்லது வெப் புகைப்பதோடு 36,870 மாணவர்கள் புகைப்பதை நிறுத்தும் இயக்கத்தில் தங்களை இணைத்துக கொண்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கெப்லி அகமட் ( Dzulkefly Ahmad) தெரிவித்தார்.
இதுதவிர தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 55 மாணவர்கள் வழக்கமான சிகரெட்டுகளையும் இதர 138 மாணவர்கள் மின் சிகரெட்டுகளையும் புகைக்கின்றனர்.
தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 201 மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
முன்கூட்டிய தடுப்பு மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துதல் நடவடிக்கைகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலம் இளைய தலைமுறையினரிடையே புகைபிடித்தல் மற்றும் வேப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளது.