
நிபோங் தெபால், ஜனவரி-18-பினாங்கு, நிபோங் தெபாலில் நடந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை இரவு சுமார் 10.20 மணியளவில், அங்குள்ள கார் கழுவும் கடையில் இருந்த அதன் உரிமையாளர் எனக் கூறப்படும் 38 வயது உள்ளூர் ஆடவரே, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளிலிருந்த இருவரில் ஒருவர் கீழிறங்கி, அருகில் இருந்து பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் கூறியது.
சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர்.
பலத்த காயமடைந்த அந்நபர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சந்தேக நபர்கள் பயன்படுத்தியது அரை தானியங்கி துப்பாக்கி என போலீஸ் சந்தேகிக்கிறது.
கொலையாளிகளுக்கு வலை வீசியுள்ள போலீஸ், இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.



